சென்னையில் அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பிராட்வேயில் இருந்து பம்மலை நோக்கி ஒரு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தின் நடத்துநராக திரிசூலம் இந்திராநகரைச் சேர்ந்த பா.தமிழரசன் (34) இருந்தார். பேருந்து நந்தனம் அரசுக் கல்லூரி நிறுத்தத்தில் நிற்கும்போது, அந்தக் கல்லூரியில் படிக்கும் வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்த ச.கோகுல்தேவன் (19) என்பவர் பேருந்தில் ஏறினார். அப்போது கோகுல்தேவன், பேருந்து நடத்துநர் தமிழரசனிடம் தகராறு செய்தாராம். தகராறு முற்றவே கோகுல்தேவன், நடத்துநர் தமிழரசனை தாக்கிவிட்டு தப்பியோடினார்.
இது குறித்து தமிழரசன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோகுல்தேவனை உடனடியாக கைது செய்தனர்.