அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழுபேடு சோதனைச்சாவடி அருகே எடையாளம் நெடுஞ்சாலையில் சென்ற கார் கார் கவிழ்ந்து, 2 பேர் இறந்தனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். அவரது மகன்கள் ஜமால் மொய்தீன் (50), மீரா மொய்தீன் (42), முகமது மொய்தீன் (55) மற்றும் அவரது உறவினர்கள் ஜலால் மொய்தீனின் மகள் சபீனா (40), சலாவுதீனின் மகள் யாஸ்மின் (7), காஜா மொய்தீனின் மனைவி மரியன் சோபியா (30) ஆகியோர் சென்னையில் இருந்து கார் மூலம் திண்டுக்கல் செல்லத் திட்டமிட்டனர். அவர்கள்காரில் செவ்வாய்க்கிழமை மாலையில் மதுராந்தகம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
தொழுபேடு சோதனைச்சாவடி அருகே எடையாளம் பகுதி நெடுஞ்சாலையில் கார் சென்றபோது காரின் முன்புற டயர் பழுதானது. இதனால் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் கார் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 6 பேரில் சிறுமி யாஸ்மின் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இவ்விபத்து குறித்த தகவலை அறிந்து மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்ட போலீஸார், மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைகளில் அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீரா மொய்தீன் இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக அச்சிறுப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.