உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் சூரசம்ஹார உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர் கோயில் திருப்புகழ் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. இக்கோயிலில், கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் சந்நிதி தெரு, சின்னநாராசம்பேட்டை தெரு, மேட்டுத் தெரு, கருணீகர் தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாகச் சென்று, இரவு 9 மணியளவில் பஜார் வீதியை வந்தடைந்தது. அங்கு சூரபத்மனை வீழ்த்தும் சூரசம்ஹார நிகழ்வுகள் வாணவேடிக்கைகளுடன் விமரிசையாக நடைபெற்றது. பின்னர், உற்சவருக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட உற்சவர் வெள்ளை செட்டி தெரு, எஸ்.பி. கோயில் தெரு, செங்குந்தர் தெரு உள்ளிட்ட மாடவீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.