தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுத் தேர்வு பெற்றுள்ள செங்கல்பட்டு பள்ளி மாணவர் எஸ்.பிரபஞ்சனுக்கு வியாழக்கிழமை பாராட்டு வழியனுப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.பிரபஞ்சன். அவர் 14 வயது சிறுவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றார். ஒடிஸாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து அந்த மாணவருக்கு பள்ளியின் விளையாட்டுத் துறை சார்பில் பாராட்டு விழா மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சம்பத் தலைமை வகித்து மாணவரை பாராட்டிப் பேசினார். பள்ளியின் தலைமையாசிரியர் எடின்பரோ, உதவி தலைமையாசிரியர்கள் பிரெட்ரிக், ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து, மாணவரை வாழ்த்தினர். விளையாட்டுத் துறை பயிற்சி ஆசிரியர் இளங்கோ இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். விழா நிறைவாக, அனைவரும் மாணவர் பிரபஞ்சனைப் பாராட்டி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.