கூடுவாஞ்சேரி அருகே நகை, பணம் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் சில நாள்களுக்கு முன்பு, ஒரு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காயரம்பேடு அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். அவர்கள் சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த பழனி(32), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் (40) என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், காயரம்பேடு பகுதியில் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 20 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.