கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.
ஊரப்பாக்கம் பகுதியில் கிளாம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (49). அவர் புதன்கிழமை இரவு வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தப்பிச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் இருந்த 20 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது. கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.