கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 77 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்எஸ்ஐ தொழிலாளர்கள், புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் 24-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மன்னூர் பகுதியில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் எம்எஸ்ஐ எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில் 150 நிரந்தரத் தொழிலாளர்களும், 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கடந்த 30 மாதங்களாக தொழிற்சாலை நிர்வாகம் ஊதிய உயர்வை வழங்காமல் உள்ளது. இதையடுத்து, தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 77 நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்னையில் தமிழக அரசை தலையிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வரும் சனிக்கிழமை (நவ. 24) இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டுவரும் தொழிலாளர் நலத் துறை அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த இருப்பதாகவும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.