அதிமுக அரசைக் கண்டித்து திமுகவினர் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தலைமை வகித்தார். மாநில மாணவரணிச் செயலர் எழிலரசன் முன்னிலை வகித்தார்.
இதில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், ஆளும் அதிமுக அரசு, குட்கா ஊழல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் ஊழல் செய்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து, செய்யூர், மதுராந்தகம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி.அரசு, புகழேந்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கே.ஆறுமுகம், மாவட்ட, தலைமை, பொதுக் குழு, நகர, ஒன்றிய உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.