ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளையும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி அண்மையில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ரூ.123 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் கடந்த சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, ஏ.எல்.எஸ்.நேதாஜி நகர் தரைமட்டத் தொட்டி மற்றும் மேல்நிலைத் தொட்டிகளைக் கட்டும் பணி, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியப் பொறியாளர்களை அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வ.பிரேமா, உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி ஆய்வாளர் சிவகுமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேசன், பாலாசுப்பிரமணியம், உதவிப் பொறியாளர் ரம்யா ஆகியோர் உடன் இருந்தனர்.