ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தூய்மையே சேவை இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி நடத்தப்பட்டது.
மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூய்மையே சேவை இயக்கத்தை பிரதமர் கடந்த 15ஆம் தேதி தொடங்கிவைத்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சித்தா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட திட்ட ஆலோசகர் தனசேகர் பங்கேற்று, திட்டத்தைத் தொடங்கிவைத்தார். விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், துனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், விஜயகுமார், காமராஜ், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், ஊக்குநர்கள், பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி நடைபெற்றது. மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், திட்ட ஆலோசகர் தனசேகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக வந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. அதன் பின், சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக கடந்த 15ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2ஆம் தேதி வரை ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள் ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுகுறித்த தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இதில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.