உலக அமைதி தினத்தையொட்டி கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் செங்கல்பட்டில் அமைதிப் பேரணியை நடத்தினர்.
கடந்த ஒரு வார காலமாக, உலக அமைதி தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டை அடுத்த படாளத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமையில் உலக அமைதி தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றுக்கு கல்லூரியின் ஆலோசர் ரவிச்சந்திரன், முதல்வர் காசிநாதபாண்டியன், டீன் எல்.சுப்புராஜ், கணினி பொறியியல் துறைத் தலைவர் ஏ.ஜபராஜ் ரத்தினகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உலக அமைதியின் சின்னமாக விளங்கும் புறாவைப் பறக்கவிட்டு இந்த நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர்கள், உதவிப் பேராசிரியர்கள் பி.வி.கோபிராஜன், எஸ்.பிரபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவர்கள் மாணவ, மாணவிகளை ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இக்கல்லூரியின் கணினி பொறியியல் துறை சார்பில் உலக அமைதி தினத்தையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மரம் நடுதல், அமைதிக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்தல், ரத்த தான முகாம், சைக்கிள் பேரணி, பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, நிறைவு விழாவாக செங்கல்பட்டில் அமைதிப் பேரணி மற்றும் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இருந்து வேதாசலம் நகர், ஜிஎஸ்டி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது.
அதன் பின், செங்கல்பட்டு ரயில்வே காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் இணைந்து உலக அமைதிக்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. உலக அமைதிக்கான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.