ஒரகடத்தை அடுத்த வடக்குப்பட்டு கூட்டுச்சாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை ஏஎஸ்பி ராஜேஷ்கண்ணன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்குப்பட்டு பகுதியில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. வடமாநிலத் தொழிலாளர்களும் இப்பகுதியில் அதிக அளவில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். அதன் பேரில், வடக்குப்பட்டு கூட்டுச்சாலையில் புதிதாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி. ராஜேஷ் கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒரகடம் காவல் உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு காவலர் நாகேந்திரன், வடக்குப்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆண்டவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய காவல் உதவி மையத்தில் மூன்று காவலர்கள் சுயற்சி முறையில் 24 மணிநேரமும் பணியில் இருப்பார்கள் என காவல்துறையினர் தெரிவித்தார்.