செல்லம்பட்டிடை பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகி நாசமாயின.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், செல்லம்பட்டிடை ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முரளி. கூலித் தொழிலாளியான அவர் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், முரளியின் குடிசை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதமானதால், அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர்.
எனினும், அந்த வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, பீரோ, அதில் இருந்த 15 பவுன் நகைகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து கருகின. இந்தத் தீவிபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.