ஒரகடம் பகுதியில், ஒரகடம்- சிங்கப்பெருமாள்கோவில் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொது மக்களும், வாகன ஓட்டுநர்களும் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் கார், இருசக்கர வாகனங்கள், வாகனங்களின் டயர்கள், கனரக வாகனங்கள், மின்னனு உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை கொண்டு வரவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் ஒரகடம் பகுதிக்கு வந்து செல்கின்றன.
அந்த கன்டெய்னர் லாரிகள் ஒரகடம் - சிங்கப்பெருமாள்கோவில் சாலையில், ஒரகடம் பகுதி முதல் அதன் ஊராட்சிக்குட்பட்ட சென்னக்குப்பம் பகுதி வரை சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களிலும், தொழிற்சாலைகளில் ஷிப்ட் மாறும் நேரங்களிலும் சாலையோரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் லாரி ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.