ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் சனிக்கிழமை (பிப். 16) நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சை முகாம் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
முகாமில், ஆண்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், தையல், தழும்பு இல்லாமல் நவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குச் சென்று வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்த கருத்தடை சிகிச்சையை செய்துகொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 வழங்குகிறது. இந்த சிகிச்சைக்கு பிறரை ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ஊக்குவிப்புத் தொகையாக ரூ.200 வழங்கப்படவுள்ளது. இதில், சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த ஆண்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். மேலும், அவர்களது வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகலை சிகிச்சைக்கு வரும்போது உடன் எடுத்து வரவேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர் நல மையங்களை அணுகி தகவல் பெறலாம். மேலும், 9962081581, 9094943939, 9486620786 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொண்டும் விவரங்களைப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.