மதுராந்தகம் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராம நிலத்தை மீட்கக் கோரி, அப்பகுதி மக்கள் மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகத்தின்முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் வட்டம், மூசிவாக்கம் கிராமத்தில் சர்வே எண் 149-இன் கீழ் 7, 8 ஆகிய இடங்களில் கிராம பொதுக் கிணறு, தொலைக்காட்சி பெட்டி அறை ஆகியவை இருந்தன. அந்த இடத்தை தனிநபர் கைப்பற்றி வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் மதுராந்தகம் காவல்நிலையத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். ஆனால், ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, தனிநபர் ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதியை மீட்கக் கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளைச் செயலர் வி.மோகன், மாவட்டச் செயலர் பி.சண்முகம், துணைச் செயலர் எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் கிளைச் செயலர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணராஜ், பி.மாசிலாமணி, விவசாயிகள் சங்க பகுதி செயலர் வி.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சார் ஆட்சியர் மாலதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தனிநபர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் வட்டாட்சியர் கல்யாணி நேரில் சென்று ஆய்வு நடத்துவார் என்றும், அதன்பின்னர் ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சார் ஆட்சியர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.