காதலர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு வியாழக்கிழமை அதிக எண்ணிக்கையில் காதல் ஜோடிகள் வந்தனர்.
சென்னையைச் சுற்றி பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதால் அங்கு பணி புரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் கடந்த பல ஆண்டுகளாக காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வந்து மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், திருப்போரூர், மதுராந்தகம், காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள், தனியார்பேருந்துகளில் காதலர்கள் வந்தனர். இருசக்கர வாகனங்களிலும் ஏராளமானோர் வந்தனர். அசைவ உணவகங்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இவர்கள் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைப்பாறை, அர்ஜுனன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்த்துச் சென்றனர்.