மதுராந்தகம் அருகே தனி நபர்களால் அரசுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
மதுராந்தகம் வட்டம், சரவம்பாக்கம் கிராமத்தில் ஏரி, குளம், குட்டை, கிராம ஊழியர் நிலம், கிராம நத்தம், நிர்வாக தரிசு நிலம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு என 400 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு நிலங்கள் உள்ளன. இவற்றை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சித்தாமூரில் தனியார் மண்டபத்தில் சரவம்பாக்கம் பொதுமக்கள் முன்னிலையில் நில மீட்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் நிலங்களை மீட்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சரவம்பாக்கம் கிராமத்துக்கு நேரில் சென்ற ஆட்சியர், அரசுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், இதுகுறித்து உரிய விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் மாலதி, மதுராந்தகம் வட்டாட்சியர் கல்யாணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.