கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரப்பாக்கம் மதுரை மீனாட்சிபுரத்தில் அண்மையில் டாஸ்மாக் கடைதிறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சாலையில் நடந்துசெல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அன்றாடம் அச்சத்துடன் செல்ல வேண்டியிருக்கும். மேலும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நடைபெறும். அதனால் டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டாஸ்மாக் கடையை மூடுவதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.