மாவட்ட அளவிலான சாரண, சாரணியர் தரம் கணிக்கும் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
தமிழ்நாடு பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான சாரண, சாரணிய மாணவர்களின் தரம் கணிக்கும் போட்டிகள் கடந்த 15, 16 ஆகிய இரண்டு நாள்கள் மகரிஷி சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடைபெற்றன.
முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பங்கேற்று, நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 60-க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் கலந்துகொண்டு, பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிக்கான நடுவர்களாக, சாரணதேவந்திரன், விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்களை 12 பிரிவுகளில் சோதித்து, மாநில அளவிலான சாரண, சாரணியர் போட்டிக்குத் தேர்ந்தெடுத்தனர்.
நிறைவாக, படப்பை அரசுப் பள்ளி, குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக். பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் செயலர் காந்திராஜன் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். போட்டிகளை சாரண, சாரணிய இயக்க ஆணையர் முனுசாமி ஒருங்கிணைத்தார்.