தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 21 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கத்தை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் தகுதியுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் திருமண உதவித் திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 21 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கத்தை ஆட்சியர் வழங்கினார். மேலும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையையும் வழங்கினார். இதில், தனி துணை ஆட்சியர் சந்திரசேகர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.