குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஊராட்சியில், கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது
தொடர்பாக, பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு கூட்டரங்கில் ஆட்சியர் இருப்பதை அறிந்த திருப்புட்குழி கிராமத்தினர், திடீரென கூட்டரங்குக்குள் சென்றனர். அங்கு ஆட்சியரை முற்றுகையிட்டு, கோடைக் காலம் தொடங்கும் முன்பே குடிநீர் இன்றி பெரியோர், சிறியோர் என அனைவரும் தவித்து வருகிறோம். ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அவர்களிடம் உறுதியளித்தார். அதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .
குடிநீர் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரை பெண்கள் முற்றுகையிட்டதால் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.