சுங்குவார்சத்திரம் பகுதியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரத்தை அடுத்த பள்ளமொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (38). அவரது மனைவி ஆதிலட்சுமி (35). கந்தன், தினமும் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆதிலட்சுமி தென்னேரி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்காக மொளச்சூர் பகுதிக்கு வந்த ஆதிலட்சுமியை வீட்டுக்கு வருமாறு கந்தன் அழைத்துள்ளார். இதற்கு ஆதிலட்சுமி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கந்தன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆதிலட்சுமியை வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கந்தனை கைது செய்தனர்.