காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மோட்ச தீபம் ஏற்றிவைத்து வழிபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், பத்திரிகையாளர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காந்தி சாலையில் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
தொடர்ந்து, ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பதாகைகளை ஏந்தியவாறு பெரு நகராட்சி வரை பேரணியாகச் சென்றனர். அங்கு, வீரமரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் உள்ள பேனரை வைத்து, மலர் அஞ்சலியும், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். மேலும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய மோட்ச தீபத்தை ஏற்றி வைத்து, அஞ்சலி செலுத்தினர்.