கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்துக்காக பிப்.22 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்த நேர்காணல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கூறியது:
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு உரிய அழைப்பாணையுடன் நேர்காணலில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வருகை தர வேண்டாம் என கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரகம் சார்பில் அவர் தெரிவித்துள்ளார்.