பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் இணையதள சேவை வசதி வைத்திருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும். மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக 4ஜி அலைகற்றையை ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யவில்லை.
இதனால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 12 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மாற்றம் செய்யப்படவில்லை.
தேசிய வங்கிகளில் அவசர தேவைகளுக்குக்கூட கடன் பெற முடியவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிப். 18-ஆம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தப்போராட்டம் 4 நாள்களாக தொடர்வதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.