ஆத்தனஞ்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் அப்பகுதியை சேர்ந்த 18 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
மக்களைத் தேடி வருவாய்த் துறை எனும் அம்மா திட்ட முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூகநலத் துறை தனி வட்டாட்சியர் கவிதா தலைமை வகித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன், ஆத்தனஞ்சேரியைச் சேர்ந்த 18 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
முன்னதாக அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித் தொகை, பட்டா உட்பிரிவு, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 35 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார், லட்சுமி உள்ளிட்ட வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.