உரிமம் இல்லாமல் இயங்கிய தனியார் நிறுவனப் பேருந்து உள்பட 7 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு பறிமுதல் செய்தார்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில் அனுமதியின்றி வாகனங்கள் அதிகளவில் இயங்கி வருவதாக, திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.கே. ஹமீதா பானு, போலீஸார் உதவியுடன், திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினார்.
அப்போது, தனியார் பேருந்து ஒன்று அனுமதி இன்றியும், உரிமத்தைப் புதுப்பிக்காமலும் திருத்தணி பகுதியில் இயங்கி வந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அதிக எடை ஏற்றிய வேன்கள், அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் என மொத்தம் 7 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு பறிமுதல் செய்தார். இதுதவிர, ஓட்டுநர் உரிமம், பர்மிட் இல்லாமல் இயங்கிய 50 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.