திருவள்ளூர் ஏரியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டியதாக 2 டிராக்டர்களை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள நத்தமேடு பாக்கம் ஏரி 429 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த ஏரியில் சிலர் டிராக்டர்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல்கள் வந்தன.
உடனே சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், வட்டாட்சியர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி ஆகியோர் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, டிராக்டர்களில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை அந்த ஏரியில் கொட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள், வருவாய்த் துறையினரைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். உடனே அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.