மாதவரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(55). இவர் மாதவரத்தில் உள்ள ஆடு தொட்டியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை காலை ஆடு தொட்டி அருகே சக்திவேல் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் சக்திவேலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.13 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து சக்திவேல் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 5 பேர், போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினர். அவர்களில் 3 பேரை போலீஸார் துரத்திப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வியாசர்பாடி சர்மாநகரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வசந்தகுமார்(17), சஞ்சய்நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் அஜீத்குமார்(18) புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன்(16) எனத் தெரிய வந்தது. மேலும் இவர்கள் மாதவரம், புழல், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் புலனாகியது. இதையடுத்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி மற்றும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.