வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இயங்கும் அந்தந்த மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நோக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் நிறுவனங்களுக்கு தகுதியான ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பட்டயம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
எனவே, மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்புக்கான முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் பணிநியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.