பாடியநல்லூர் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாடியநல்லூர் ஊராட்சியில் பெரியார்நகர், பவானிநகர், பாடியநல்லூர், எம்.ஏ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், குப்பை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் குப்பைகள் பாடியநல்லூர் ஊராட்சி அலுவலக வளாகத்தின் பின்புறம் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பைகளால் அருகிலுள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அத்துடன், அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் எடுக்கப்படும் தண்ணீரும் மாசடைந்து வருகிறது.
எனவே, ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பாடியநல்லூர் கிராம மக்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகர், ஊராட்சி செயலர் சுரேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.