பழவேற்காடு ஏரிப் பகுதியை தூர்வாரக் கோரி 20 கிராம மீனவர்கள் போராட்டம்

பழவேற்காட்டில் ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியை தூர் வாரக்கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் திங்கள்கிழமை முதல் தொடர்
பழவேற்காடு ஏரிப் பகுதியை தூர்வாரக் கோரி 20 கிராம மீனவர்கள் போராட்டம்


பழவேற்காட்டில் ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியை தூர் வாரக்கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதில், 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனர். 
இந்த ஏரியின் முகத்துவாரப் பகுதியில் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் சென்று திரும்புவது வழக்கம். தற்போது முகத்துவாரம் முழுதும் மண் திட்டுகளால் அடைந்து கிடப்பதால் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. 
இதனால், பழவேற்காடு ஏரியில் மீன் வளம் குறைந்துள்ளது. மேலும், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வோரின் படகுகள் அவ்வப்போது முகத்துவாரப் பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கிக் கொள்வதால் படகுகள் பழுதாகி விடுகின்றன. அத்துடன், படகுகளைத் தள்ளிச் செல்லவும் முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
எனவே, ஏரியின் முகத்துவாரப் பகுதியை தூர் வாரக்கோரி அப்பகுதி மீனவர்கள் அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் சொந்த செலவில் அவ்வப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் முகத்துவாரப் பகுதியை தூர் வாரி வந்தனர். இந்நிலையில், முகத்துவாரப் பகுதியில் அதிக அளவில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளதால், மீன் பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
இதனை தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒருங்கிணைந்து, ஏரியின் முகத்துவாரத்தை தூர் வாரக் கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி வருவாய்த் துறை, மீன் வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது, ஏரிப் பகுதியை தூர் வாரும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும், மீன் வளத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ ஆகியோர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் முகத்துவாரப் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com