மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வழங்கினார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனர்.
இதில் நிலம் சம்பந்தமாக - 35, சமூகப் பாதுகாப்பு திட்டம் - 30, சமூக நலத் திட்டம் - 2, கடனுதவி - 1, ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் - 1, வேலைவாய்ப்பு - 29, சட்டம் மற்றும் ஒழுங்கு - 4, கல்வி - 3, இதர துறைகள் - 37, அடிப்படை வசதி போக்குவரத்து மற்றும் சுகாதாரம் - 3, ஊரக நகர்ப்புற வளர்ச்சி - 18, சான்றிதழ் - 2 என மொத்தம் 165 மனுக்கள் வரையில் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் 5 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.69,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரஞ்சித், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.