மாதவரத்தில் மீன் மற்றும் ஊட்டச்சத்து உணவு தொழில்நுட்பக் கல்லூரியை அமைச்சர் டி.ஜெயக்குமார் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில், மீன் மற்றும் ஊட்டச்சத்து உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா, பேராசிரியர் சுக.பெலிக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர்
டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, கல்லூரியில் 40 மாணவர்களுக்கான சேர்க்கை அனுமதி ஆணைகளை அவர் வழங்கினார். அத்துடன், தமிழகத்தின் மீன்வள முன்னேற்றத்திற்கான திட்டம் பற்றிய குறுந்தகட்டையும், உயிர்க்கூழ் தொழில்நுட்பம் பற்றிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
விழாவில், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நா.பெலிக்ஸ் அனைவரையும் வரவேற்றார். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா.அகிலன் நன்றி கூறினார்.