திருவள்ளூர் அருகே சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி ஊராட்சி ஒன்றியம், அனந்தேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள், 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், 40-க்கும் மேற்பட்ட வளர் இளம் பெண்களும் இம்மையத்தின் மூலம் பயனடைந்து
வருகின்றனர்.
இந்நிலையில், இக்கட்டட வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேல்தளம் மற்றும் சுவரில் விரிசல்கள் உள்ளதால், மழை பெய்தால் ஒழுகும் நிலையும் உள்ளது. இதனால், வேறு வசதி இல்லாத நிலையில், தற்போது சிறிய அளவிலான பொதுக்கட்டட வளாகத்தில் இடநெருக்கடியுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்திற்கொண்டு அங்கன்வாடி மையத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனந்தேரி கிராம மக்கள் சார்பில் மகளிர் குழுத் தலைவி எம்.கீதா புதன்கிழமை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.