திருவள்ளூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் ஈக்காடு பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.
இதனால் மின்கம்பங்கள் சாய்ந்தன. அதோடு, அப்பகுதியில் மின்வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் ஈக்காடு பகுதி மக்கள்
அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, புதன்கிழமை காலையில் மின்வாரியப் பணியாளர்கள் விரைந்து வந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், முறிந்து விழுந்த மரங்களையும், மின்கம்பங்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அதைத்தொடர்ந்து, மாற்று மின்கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் கூறுகையில், இப்பகுதியில் நடப்பட்டுள்ள பழைய மின்கம்பங்கள் அனைத்தும் திடமாக உள்ளன. இவற்றில், கடந்த 2015-இல் வார்தா புயலுக்குப் பிறகு நடப்பட்ட புதிய மின்கம்பங்கள் அனைத்தும் பலவீனமானவை.
இவை சிறு கம்பிகளை வைத்து தயார் செய்யப்பட்டவை. இதனால், சிறு காற்று மழைக்குக் கூட தாங்க முடியாமல் துண்டு துண்டாக முறிந்து விழுகின்றன. எனவே, இனிமேலாவது மின் வாரியத்தினர் தரமான மின் கம்பங்களை நட்டு மின் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.