பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப் பகுதியை தூர் வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
பொன்னேரி வட்டத்தில், கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதில், 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த ஏரியை நம்பி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஏரியின் முகத்துவாரம் முழுதும் மண் திட்டுகளால் அடைந்து கிடப்பதால் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன் வளம் குறைந்தது. இதையடுத்து, பழவேற்காட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒருங்கிணைந்து, ஏரியின் முகத்துவாரப் பகுதியைத் தூர்வாரக் கோரி, செப்டம்பர் 17, 18-ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, புதன்கிழமை ஏரியும்-கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியில், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக தூர் வாரும் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.