திருவள்ளூர் பகுதிகளில் பல்பொருள் அங்காடி மற்றும் உணவகங்களில் உணவுப்பொருள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததுடன், விதிமுறை மீறி செயல்பட்டதற்காக ரூ. 60 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருள்களைப் அடுத்தாண்டு முதல் பயன்படுத்த முதல்வர் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்களில் ஆட்சியர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பஜார் பகுதியில் பெரிய பல்பொருள் அங்காடியில் நடத்திய தீவிர சோதனையிலி, விதிமுறை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது
தெரியவந்தது.
அதேபோல் ஜே.என். சாலைப் பகுதியில் உணவகத்தில் உணவு பொருள்களை சிப்பமிட பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அந்தக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ஆட்சியர் அபராதம் விதித்தார். இதன் அடிப்படையில், 2 கடைகளுக்கு தலா
ரூ. 25 ஆயிரமும், ஒரு பல சரக்கு கடைக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதாரப் பிரிவு அலுவலர் கோவிந்தராஜ், சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்தகரன் உள்ளிட்டோர் உடன்
இருந்தனர்.