திருத்தணி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி - அரக்கோணம் சாலை, வள்ளியம்மாபுரம் பகுதியில், போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, அவர்களது வாகனங்களில், கனரக வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் 3 பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்(25), வெங்கடேசன்(40), காளிப்பன்(26), சரத்குமார்(25) என்பதும், அவர்கள் அனைவரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 12 பைக்குகளைத் திருடியதையும், ஆந்திர மாநிலம் சந்திரவாடா பகுதியில் இருந்து கனரக வாகன பேட்டரிகளைத் திருடி வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, திருத்தணி போலீஸார் அவர்களிடமிருந்து 12 இரு சக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.