லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை

லாரி ஓட்டுநரிடம் இருந்து செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர் லாரி மோதி உயிரிழந்தார்.
லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை


லாரி ஓட்டுநரிடம் இருந்து செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர் லாரி மோதி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞரின் நண்பர்கள் லாரி ஓட்டுநரை அடித்துக் கொன்றனர். 
சென்னையை அடுத்த அம்பத்தூர் - புதூர் திருமலைப்பிரியாநகர் 7-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வீராங்கன்(45). லாரி ஓட்டுநர். இவர், வியாழக்கிழமை இரவு, தான் ஓட்டிவந்த லாரியை மஞ்சம்பாக்கம் சாலையில் நிறுத்திவிட்டு, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது, சென்னை வியாசர்பாடி ஏரிக்கரை மூர்த்திங்கர் தெருவைச் சேர்ந்த சுகுமார்(19), வினோத்(17) மற்றும் இவர்களுடைய நண்பர் மணிகண்டன்(17) ஆகிய 3 பேரும் இருசக்கரவாகனத்தில் வந்து வீராங்கனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் 3 பேரையும் பிடிப்பதற்காக ஓடினர். 
பொதுமக்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதில், நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது, மணலியில் இருந்து இரும்புச் சுமை ஏற்றி வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே சுகுமார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்தும், மணிகண்டனும் லாரி ஓட்டுநர் மணியை (50) அடித்துக் கொன்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து வினோத், மணிகண்டன் இருவரையும் கைது செய்தார். 
இருவரும் திருவள்ளூர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த சுகுமார் மீது செங்குன்றம், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com