வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் "சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2019' தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாநில திட்டமிடல் ஆணையத்தின் செயலர் அனில் மேஷ்ராம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
முன்னதாக, ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் குறித்து அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். அப்போது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் குறித்த குறைகளை அனில் மேஷ்ராம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியது: இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 18 வயது நிறைவு செய்தோர், இதுவரையில் பெயர் சேர்க்காதோர், ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு பெயர் மாற்றம் செய்வோர் விண்ணப்பிக்கும்போது ஏதும் சந்தேகம் எழுந்தால், அவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உரிய விளக்கம் அளித்து உதவி செய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அவற்றை நீக்கி விட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ.எல்.சி. பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், திருவள்ளூர் சார் ஆட்சியர் டி.ரத்னா, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.