கவரப்பேட்டை அருகே வியாழக்கிழமை பிளஸ் 2 மாணவி மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகள் ஷர்மிளா(17), கவரப்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்தார். அவர் சிற்றரசூர் பகுதியைச் சேர்ந்த ஐடிஐ மாணவர் அஜீத் (18) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஷர்மிளா வியாழக்கிழமை, அஜீத்துடன் கவரப்பேட்டை ரயில் பாதை வழியே 2 கி.மீ தொலைவில் உள்ள பன்பாக்கத்துக்கு நடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு ஷர்மிளா உயிரிழந்தாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஷர்மிளாவின் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். ஷர்மிளா ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன் தள்ளி விடப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீஸார், அஜீத்திடம் விசாரித்து வருகின்றனர்.