குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி காந்தி பிரதான சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த, 10 நாள்களாக தெருக்குழாய் களில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பெண்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் காந்தி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார், உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் ஏற்பாடு செய்து தருவதாகவும், டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்து தருவதாகவும் உறுதி கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.