கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவி சஷ்டிகா (14) மாநில அளவில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சஷ்டிகா கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தியா நியூ மாங்க்ஸ் குங்ஃபூ அமைப்பு சார்பில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10-ஆம் தேதியன்று, மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. அதில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இறுதியில், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான போட்டி நடைபெற்றது. அதில், கும்மிடிப்பூண்டி மாணவி சஷ்டிகா, சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற யோகா மாணவி சஷ்டிகா மற்றும் அவரது பயிற்றுநர் சந்தியா ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் நேரில் பாராட்டினர்.