கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், 4 சவரன் தங்க நகை, ரூ. 24 ஆயிரம் ரொக்கம், பட்டுப் புடவைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
இது குறித்த விவரம்:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ம.பொ.சி நகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் தனது குடியிருப்பில் உள்ள 10 வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு வீட்டில் குடியிருப்பவர் ஸ்ரீகாந்த்(34). அவர் வெள்ளிக்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் 4 சவரன் நகை, ரூ.24 ஆயிரம் ரொக்கம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளை திருடிச் சென்றனர். ஸ்ரீகாந்த் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அக்கம் பக்கத்தார் சனிக்கிழமை பார்த்தனர். இது குறித்து அவருக்குத் தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பணமும், நகைகளும் திருடப்பட்டிருப்பதைக் கண்டார். இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாருக்கு தகவல் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, இரு மர்ம நபர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.