ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு திருவள்ளூரில் பாஜக சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பினர் அண்மையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மாவட்ட பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சிக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். உயிரிழந்த வீரர்களின் உருவப் படங்களுக்கு அக்கட்சியினர் மலர் தூவியதோடு, மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலியும் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச் செயலர் ராஜ்குமார், மாவட்டச் செயலர்கள் கருணா, நகரத் தலைவர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.