திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறியது: திருவள்ளூர் அருகே நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (42) . இவர், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு பணிமுடித்து நத்தமேடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மோரை கிராமத்தை அடுத்த வேல்டெக் பல்கலைக்கழகம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கணேசன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.