குமாரகுப்பம் பகுதியில் ரூ. 7.41லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
திருத்தணி நகராட்சி, 21-ஆவது வார்டு முருகூர் மற்றும் குமாரகுப்பம் பகுதி மக்களின் வசதிக்காக, குமாரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து, ரூ. 7.41லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தார். பின்னர், அதே பகுதியில் ரூ. 8.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் செளந்தர்ராஜன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் மாசிலாமணி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.