நடிகர் ஜெயராமனின் வீட்டை கல் வீசி சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தமிழ் பெண்கள் குறித்து நடிகர் ஜெயராமன் கடந்த 2010-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 5.2.2010 அன்று, சென்னை, போரூர், காரம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமன் வீட்டின் மீது நாம் தமிழர் கட்சியினர் கல் வீசித் தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அந்த வீட்டைச் சேர்ந்த பணியாளர் மைக்கேல்ராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் 22 முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கில் திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணைக்காக திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் சீமான் புதன்கிழமை ஆஜரானார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் வரும் 26-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.